தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை நகரில் வீற்றிருக்கிறது அருணாச்சலேஸ்வரர் கோயில் என்றழைக்கப்படுகிற அண்ணாமலையார் திருக்கோவில். இந்த அண்ணாமலையார் திருக்கோவில் சென்னையில் இருந்து 195 கிலோ மீட்டர் தொலைவிலும், திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவிலும் அமையப்பெற்றுள்ளது.
ஸ்தல புராணம் / திருவண்ணமலை அண்ணாமலையார் கோவில் வரலாறு
பிரம்மாவிற்கும் திருமாலுக்கும் ஏற்பட்ட யார் பெரியவர் என்ற போட்டியில் அடி முடி காண இயலாத ஆதிமூலமாய் நின்ற சிவபெருமானின் திருக்கோவில் இது. இங்கு சிவனே மலையாக வடிவமெடுத்திருப்பதாக கருதப்பட்டு , கோவிலில் இறைவனை சுற்றுவது போல் , திருவண்ணாமலையை மக்கள் சுற்றி அண்ணாமலையாரை மக்கள் வழிபடுகிறார்கள். இந்த இறை வழிபாடு கிரிவலம் என பிரசத்தியாக பக்தர்களாலும், தமிழக மக்களாலும் இன்றளவும் அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில், ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தை மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் நாம் காணலாம்.
திருவண்ணாமலையானது 250 கோடி ஆண்டுகள் பழமையானது என திரு. பீர்பால் சகனி என்ற தொல்லியல் அறிஞர் கண்டறிந்துள்ளார், மேலும் வரலாற்று கூற்றுகளிலிருந்து, அண்ணாமலையாரை வேண்டி கொண்டு, பக்தி நிமித்தமாய் திருவண்ணாமலை பாதையை மக்கள் சுற்றும் பழக்கம் பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடிக்கப்பட்டு வருகிறதென்பது நமக்கு நன்கு புலப்படுகிறது. இந்த கிரிவல பாதையை ஜடார்வ விக்ரம பாண்டிய மன்னன் கி.பி 1240 களில் செம்மைப்படுத்தி, மக்கள் வழிபாட்டிற்கு பேரூதவிகளை செய்து கொடுத்தமையால், இவரின் அண்ணாமலையார் கோவில் திருப்பணி இன்றளவும் மக்களால் புகழ்ந்து பேசப்படுகிறது.
அண்ணாமலையார் கோவிலின் சிறப்பம்சம்
பஞ்சபூத தளங்களில் முக்கியமானதாக, சைவர்களால் கருதப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தினமும் ஆறுகால பூஜைகளோடு, பஞ்ச பூர்வ பூஜைகளான பௌர்ணமி, அமாவாசை, கிருத்திகை, பிரதோசம் மற்றும் சதுர்த்தி பூஜைகள் இனிதே நடைபெறுகின்றன. இந்த சிவாலயம் பின்வரும் சிறப்புகளை பெற்றுள்ளது
ராஜகோபுரங்களின் எண்ணிக்கை : 9
அண்ணாமலையார் கோவில் பரப்பளவு : 25 ஏக்கர்
பிரகாரங்கள் எண்ணிக்கை : 6
சன்னதிகள் : 142
மண்டபங்கள் : 306
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு செல்லும் போக்குவரத்து வழிகள்
தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மற்றும் ஆந்திர பிரதேச பகுதிகளிலிருந்து திருவண்ணாமலை நகருக்கு பேரூந்து வசதிகள் உள்ளன, ரயில் மூலம் வருபவர்கள், வேலூர் காட்பாடி, விழுப்புரம், சென்னை, திண்டிவனம் போன்ற பகுதிகளுக்கு வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவண்ணாமலையை வந்தடையலாம்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலை ரயில் மார்கமாக சென்றடைய, விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும், காட்பாடி வேலூர் ரயில் நிலையத்திலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
சாலை மார்க்கமாக சென்றடைய சென்னையிலிருந்து 190 கிலோ மீட்டர் தொலைவிலும், திண்டிவனம் மற்றும் விழுப்புரத்திலிருந்து தலா 60 கிலோமீட்டர் தொலைவிலும், வேலூரிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து செல்பவர்கள் செங்கல்பட்டு மார்க்கமாகவும் மற்றும் காஞ்சிபுரம் மார்க்கமாகவும் சென்றடையலாம். அங்கு தங்கி அருணாச்சலேஸ்வரை வழிபட நிறைய தனியார் தங்கும் அறைகளும் செயல்படுகின்றன.
கோவில் தகவல்கள்
திறக்கும் மற்றும் தரிசன நேரம் :
காலை : 5 :30 மணி முதல் 12 :30 மணி வரை
மாலை : 3 :30 மணி முதல் 9 :00 மணி வரை
தொடர்பு தொலைபேசி எண்:
04175 252 438
கோவில் முகவரி :
Joint Commissioner/Executive Officer , அருள் மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை – 606601
மின்னஞ்சல் : arunachaleswarar@tnhrce.org